×

ரூ2.25 கோடி சொத்து குவிப்பு: எஸ்.ஐ, மனைவி மீது வழக்கு

மதுரை: மதுரை, மாட்டுத்தாவணி அருகே டி.எம் நகர் 6வது தெருவைச் சேர்ந்தவர் தென்னரசு (49). கடந்த 2000ம் ஆண்டு திருநகர் காவல் நிலையத்தில் எஸ்ஐயாக பணியாற்றினார். 2013ல் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்றார். இவர் மீது பல்வேறு லஞ்ச புகார்கள் வந்துள்ளது. இதனால், அதே ஆண்டு டிசம்பரில் ஒழுங்கு நடவடிக்கை காரணமாக பதவியிறக்கம் செய்யப்பட்டு மீண்டும் எஸ்ஐ ஆகியுள்ளார். கடந்த 2014 முதல் எஸ்ஐ ஆக பணியாற்றி வரும் தென்னரசு, தற்போது மதுரை நகர துணை கமிஷனரின் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவின், சிறப்பு பிரிவில் பணியாற்றி வருகிறார்.

தொடர்ந்து இவர் மீது வந்த புகாரின்பேரில், தென்னரசுவின் டிஎம் நகர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு ேபாலீசார் சோதனை செய்தனர். இதில் அவர் மற்றும் அவரது மனைவி பெயர்களில் வீடு, நிலம் வாங்கி இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் இருவரின் வங்கி கணக்கு, தங்க நகைகள், அசையும், அசையா சொத்துக்களின் விபரங்களையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சேகரித்துள்ளனர். இதையடுத்து எஸ்ஐ தென்னரசு மற்றும் இவரது மனைவி கவிதா மீது கடந்த 1.4.2016 முதல் 31.3.2020 வரை ரூ2 கோடியே 21 லட்சத்து 81 ஆயிரத்து 287 மதிப்பில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post ரூ2.25 கோடி சொத்து குவிப்பு: எஸ்.ஐ, மனைவி மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : S. I ,Madurai ,Matutawani M Nagar ,6th street south arasu ,49 ,Trinagar ,Dinakaran ,
× RELATED அகமதாபாத் விமான நிலையத்தில்...